ஜெயங்கொண்டம், ஜன. 29: ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் தேவி (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். இதையடுத்து வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு தேவியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கல்லாத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் குழந்தை வளர்ந்து வருகிறது.
தேவி கடந்த 3 மாதங்களாக மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் தேவி கடந்த 21ம் தேதி குழந்தையை பார்க்க தனது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 24ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தேவியின் குடும்பத்தினர். கல்லாத்தூர் பகுதி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தேவியின் தாய் சித்ரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து தேவியை தேடி வருகிறார்.