குளித்தலை, ஜன. 28: கே.பேட்டை ஊராட்சியில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 71வது குடியரசு தினவிழாவையொட்டி குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரை செல்வி, குணாளன், ஜெகநாதன், சுமதிகோபால், பாப்பாத்திபிச்சை, செல்வி கலா, சக்திவேல், பாலதண்டாயுதம், மகேந்திரன், ரத்தினவள்ளி சண்முகம், இனுங்கூர் குமார் ஆகியோர் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி கிராம சபை கூட்டம் நடத்தினர். குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் விஜயவிநாயகம் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவேல், மங்கையர்க்கரசி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், சங்கீதா, முருகேசன், சத்யா, கவுரி, ராஜேஸ்வரி அறிவழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கே.பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி தலைமையில் துணைத்தலைவர் விமலா முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.