கோவை, ஜன. 28: அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கத் திட்டமிடப்பட்டு 3 ஊராட்சிகள், 1 பேரூராட்சியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளிக், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில், அம்மா விளையாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு மைதனம் அமைப்பதற்குத் தேவையான இடங்களை தேர்வு செய்வதற்கு ஊராக வளர்ச்சி, பேரூராட்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையுடனும் மற்றும் பேரூராட்சிகளில் பேரூராட்சித் துறையுடனும் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கபடி, வாலிபால் மைதானங்கள் கட்டாயமாகவும், ஊராட்சிகள், பேரூராட்சிகளிலுள்ள விளையாட்டு வீரர்களின் தேவையைப் பொறுத்து கிரிக்கெட் அல்லது பால் பேட்மிண்டன் மைதானங்களில் ஏதாவது ஒன்றும் என மூன்று விதமான மைதானங்கள் அமைக்கப்படுகிறது.