அம்பத்தூர், ஜன. 24 : புழல் சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகளை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 12 போலீசார் அம்பத்தூர் கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். அப்போது, அங்கு திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய அயனாவரம், பெரியார் நகரைச் சார்ந்த அஜித்குமார் (21) என்பவரும் வழக்கு சம்பந்தமாக வந்துள்ளார். பின்னர், அவர் புழல் சிறையில் இருந்து வந்த குற்றவாளி மன்மதன் என்பவரை தனியாக அழைத்து பேசியுள்ளார். இதனை பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் விஜய் (25) தடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், போலீஸ்காரர் விஜய், அஜீத்குமாரை கன்னத்தில் அடித்துள்ளார். இதனை அடுத்து அஜித்குமார் கோர்ட்டுக்குள் நுழைந்து நீதிபதியிடம் போலீஸ்காரர் அடித்ததை கூறி உள்ளார்.