மஞ்சூர், ஜன.23:குந்தா பகுதியில் சுற்றுலா மேம்பாடு, அரசு கலை கல்லூரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குந்தா பகுதியில் அரசு, தனியார் கல்லூரிகள் ஏதும் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கே சென்று வர வேண்டியுள்ளது. இதனால், குந்தா பகுதியில் அரசு கலை கல்லூரி ஏற்படுத்த வேண்டும். குந்தா வட்டத்தின் தலைநகராக மஞ்சூர் உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான எந்த அடிப்படை வசதி, கூடுதல் மருத்துவர்கள் நியமிக்காததால், நோயாளிகளுக்கான 24 மணி நேர சிகிச்சை என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அவசர சிகிச்சை மட்டுமின்றி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவைகளுக்கு கூட தொலை தூரமுள்ள உதகை, குன்னுர் போன்ற இடங்களுக்கே செல்ல வேண்டியுள்ளது
எனவே மஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் மட்டுமே பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த ஒரு வேலை வாய்ப்புக்கும் வழியில்லாத பகுதியாகவே உள்ளது.