பொன்னேரி, ஜன.21: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ரூபாய் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பிறகு நிலைத்த நீடித்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள்நடைபெற்றன. பழவேற்காடு கிராம மக்களின் நலன் கருதி கூடிப் பேசுவதற்கும், சுப நிகழ்ச்சிகள் நடத்து வதற்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய கூடம் கட்டப்பட்டது. ஆனால் அதை பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் கட்டிடத்தின் ஜன்னல், கதவுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதற்குள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் புகுந்து சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.