தென்காசி, ஜன. 20: தென்காசி அருகே மத்தளம்பாறை கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார கேடு நிலவுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மத்தளம்பாறையை அடுத்த பகுதியில் சாலையோரம் தொடர்ச்சியாக குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய பிரச்னை காணப்படுகிறது. குறிப்பாக இரவு வேளைகளில் கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும், விளை நிலங்களிலும் கொட்டப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம், பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலையில் இதுபோன்ற துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு காணப்படுவது சுற்றுலாப் பயணிகளின் பயணிகளுக்கு அசவுகரியமாக உள்ளது.