தாராபுரம், ஜன. 19: தாராபுரம் அருகே எருதுகட்டு விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமம் உள்ளது. இங்கு பொங்கல் விழாவையொட்டி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எருதுகட்டு விழா நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது என்றால், தாராபுரம் அருகே நடைபெறும் எருதுகட்டு விழா தமிழக அளவில் மிகவும் பிரபலமானது. இதில் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தின் நடுவில் பனை மரத்தை நட்டு வைத்து, 60 அடி நீள கயிற்றில் காளைகள் கட்டி வைக்கப்படும். இதில் ஆவேசத்துடன் இருக்கும் காளைகள் கயிற்றுடன் ஆவேசமாக விளையாட்டு மைதானத்தை சுற்றி வரும். அதனை பிடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் காளையின் திமிலை பிடித்து அடக்க வேண்டும் என்பது விதிமுறை.