இளையான்குடி, ஜன.19: இளையான்குடி பகுதியில் ஊடுபயிராக நாட்டு மல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நெல், மிளகாய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் டேங்கர் மற்றும் டிராக்டரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மிளகாய் செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர்.
கடந்த ஆண்டு உள்ளூர் பகுதியில் விளையும் நாட்டு மல்லி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது, அதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ நாட்டு மல்லி 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டது. மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் லயன் மல்லி எனப்படும் சம்பா மல்லி ஒரு கிலோ 130 ரூபாயிலிருந்து 160 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டது.