பெரியகுளம், ஜன.14: பெரியகுளத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு அறுவடை ஜரூராக நடைபெற்று வருகிறது. நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் தினத்தையொட்டி செங்கரும்புகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு வரை 500 ஏக்கர் வரை கரும்பு விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது மழை இன்மை மற்றும் கூலியாட்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களால் 200 ஏக்கராக குறைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது சாகுபடி செலவு மற்றும் கூலியாட்களின் செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.