நாகர்கோவில், ஜன.13: நாகர்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கு பின்புற பகுதியில் உள்ள புதரில், 10ம் தேதி இரவு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. இறந்து கிடந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்து கொலை செய்து உள்ளனர் என்பது உறுதியானது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (44) என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவரது உறவினர்கள், நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஏற்கனவே கோட்டார் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் கைப்பற்றப்பட்டது குறித்து கூறி, கோட்டார் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வாலிபர் உடலை பார்த்து ராஜேஷ் தான் என்பதை உறுதிப்படுத்தினர். இறந்து கிடந்த ராஜேஷ் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.