கரூர், ஜன. 12: கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் ஆண்டாங்கோயில் அமராவதி ஆறு முதல் மகாத்மா காந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ. 33 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படவுள்ளன. தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஊர் பொதுமக்கள் சார்பாக ரூ. 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 108 காசோலைகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாவிடம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், சேகர் உட்பட ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
தோகைமலை, ஜன. 12: தோகைமலை அருகே ஆர்டிமலை விராச்சிலேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலை விராச்சிலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா தரிசன பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து நடராஜருக்கு இளநீர், தயிர், பன்னீர், பால், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், குங்குமம், பழ வகைகள் உள்ளிட்ட 21 திரவியங்கள் மூலம் அபிசேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு மஹா அபிசேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடராஜர் மீது சாத்தப்பட்டிருந்த சந்தனத்துகள்களை பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். மேலும் சிறப்பு அலங்காரம் செய்யபட்ட நடராஜர் ஊர்வலமாக வீதியுலாவாக வந்தார். அப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். மலைக்கோவில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினார்கள். இதில் ஆர்டிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.