மானாமதுரை, ஜன.10: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வேகேட் தினமும் நாற்பது நிமிடங்களுக்கு மேல் மூடப்படுவதால் கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்கு, பள்ளிக்கு செல்வதற்கு நாற்பது நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மானாமதுரை அருகே உள்ளது வெள்ளிக்குறிச்சி கிராமம் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை உள்ளது. இங்கு ரயில்வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்( எண்: 56724) கிளம்புவதற்கு முன்பே வெள்ளிக்குறிச்சி கேட் அடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இருந்து காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் சிரமத்திற்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர்.