விருதுநகர், ஜன. 9: மத்திய அரசை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் 22 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 721 பெண்கள் உட்பட 1,655 பேர் கைது செய்யப்பட்டனர்.ரயில்வே, வங்கிகள், தொலைபேசி, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தரைவார்ப்பதை கண்டித்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். தினக்கூலி, காலமுறை ஊதியம் பெறும் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 250 நாட்களாக உயர்த்தி கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும். 60 வயது முடிந்த விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடிமக்கள் கணக்கெடுப்பு சட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.