திருப்பூர், ஜன. 9: தொழில் பழகுனர் பயிற்சி திட்டத்தை மாவட்ட நிர்வாகம் பயனாளிகளை தேர்ந்தெடுத்து உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கவேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். திருப்பூர் பின்னலாடைக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்திக்கு ஏற்ப தொழிலாளர்கள் இல்லாததால் தினமும் அவதிப்படுகின்றனர். வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்தாலும் திடீரென தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு கும்பலாக சென்று விடுகின்றனர். இதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் புரோக்கர்களுக்கு மீண்டும் பணம் கொடுத்து புதிய ஆட்களை அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. புதிய தொழிலாளர்களுக்கு வேலை பழகவே பல மாதங்கள் ஆகும். வேலை பழகியவுடன் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இதனால், உற்பதி குறைவதுடன் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாமல் நிறுவன உரிமையாளர்கம் அவதிப்படுகின்றனர்.