கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஜன.10ல் ஆருத்ரா தரிசன விழா

ஈரோடு, ஜன.8:  ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஜன.10ம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும் 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவமும்,  மாலை பிச்சாண்டவர் திருக்கோயிலில் எழுந்தருளிய பிறகு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

10ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, நடராஜர் தரிசனமும், கோயில் உள் பிரகாரம், வெளி பிரகாரம் நடராஜர் சுத்துதலும், கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருடன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு நடராஜ பெருமானுக்கு விடையாற்றி அபிஷேகம், சோமஸ்கந்த பெருமானுக்கு ஊஞ்சள் உற்சவமும் நடக்கிறது.

Related Stories: