தேனி, ஜன.8: தேனியில் பாம்புகள் படையெடுப்புகளால் அலறும் பொதுமக்கள், தினமும் பலமுறை தீயணைப்புத்துறைக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதனால் தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றனர். தேனியில் மழைக்காலம் முடிந்து வெயில் சீசன் தொடங்கி விட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் வெயில் சில நாட்களாக சுட்டெரிக்கிறது. தேனி நகராட்சியில் சிவராம்நகர், வள்ளிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர், விஸ்வநாததாஸ் காலனி, கொட்டகுடி ஆற்றுப்படுகை குடியிருப்பு, ராம்நகர், வீரப்பஅய்யனார் கோயில் செல்லும் ரோடு குடியிருப்பு பகுதிகள் மலைஅடிவாரங்களிலும், தோட்டங்களின் ஓரங்களிலும் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் பாம்புகள் புகுந்து விடுகிறது. தினமும் குறைந்தது 5 முதல் 10 அழைப்புகள் தேனி தீயணைப்புத்துறைக்கு வருகின்றன. தீயணைப்புத்துறையினர் சென்றால் பாம்பு, இங்கே சென்று மறைந்து கொண்டது. அங்கு சென்று விட்டது என கண்ணாமூச்சி காட்டுகின்றனர். ஒருசில இடங்களில் மட்டும் பாம்புகள் பிடிபடுகின்றன. இவற்றை பாதுகாப்பாக வனப்பகுதிகளில் கொண்டுபோய் விடுகின்றனர்.