சேலத்தில் பரபரப்பு சம்பவம் கடன் தொல்லையால் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்

சேலம், ஜன.8: சேலத்தில் கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த வாலிபர் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி கண்டன்(39). கூலித்தொழிலாளியான இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் , கடன் வாங்கி ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து வாங்கிய கடனை அவரால் கொடுக்கமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வந்தனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு மனைவி தீபா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். தனியாக வீட்டில் இருந்த மணிகண்டன், கத்தியால் வயிற்றில் தனக்கு தானே குத்திக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: