நாகர்கோவில், ஜன.8: வேட்பாளர் பெயர்கள் கடைசி நேரத்தில் நீக்கம் காரணமாக முடிவு அறிவிக்கப்படாமல் இருந்த குமரி மாவட்டத்தில் உள்ள 3 வார்டுகளுக்கு இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பெயர்கள் பரிசீலனை, வாபஸ் போன்றவற்றுக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சின்னம் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் திடீரென்று நீக்கப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் வாக்களிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் துணை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளை எண்ண வேண்டாம். அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் ஆணையம் முதலில் சுற்றறிக்கை அனுப்பி வைத்தது.