முசிறி, ஜன.7: திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். முசிறி தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முசிறியில் 18 பேரும், தொட்டியத்தில் 19 நபர்களும், தா.பேட்டை ஒன்றியத்தில் 14 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையடுத்து முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணியன் மனோகரன் லலிதா ஆகியோரும், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அருள்மொழி செந்தில்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுவாமிநாதன், மணிவேல் ஆகியோர் வெற்றி பெற்ற 51 வேட்பாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.