அரவக்குறிச்சி, ஜன. 3: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை கரூர் தேசிய நெடுஞ்சாலையிள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கான மாவட்ட கவுன்சிலருக்கு 1, ஒன்றியக் குழு உறுப்பினருக்கு 11, பஞ்சாயத்து தலைவருக்கு 20, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 156 என 188 உள்ளாட்சி பதவிகளுக்கு 268 களத்தில் இருந்தனர். தேர்தலில் 114 வாக்குச்சாவடிக்கு 906 அலுவலர்கள் பணியற்றி வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தலில் 114 வாக்குச்சாவடிக்கு 906 அலுவலர்கள் பணியாற்றி ஓட்டுப் பதிவு முடித்தது.
ஓட்டுப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான கரூர் தேசிய நெடுஞ்சாலையிள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. டிஎஸ்பி கல்யாணகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 17 சப் இன்ஸ்பெக்டர்கள், 138 க்கும் மேற்பட்ட காவலர்கள் என வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எண்ணிக்கையின் போது மாவட்ட பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடை பெற்றது.இரவு 7 மணி நிலவரப்படிபஞ்சாயத்து தலைவருக்கு 13 பேர், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு 6 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற ஈசநத்தம் ராமசாமி, சேந்தமங்கலம் மேற்கு ஊராட்சி கவிதா ஆகியோர் தி மு க ஆதரவு வேட்பாளர்கள் ஆவர்.