மூணாறில், ஜன.3: மூணாறில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடமலைகுடி பகுதியை கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேரில் சென்று பார்வையிட்டார். கேரளா மாநிலத்தில் ஆதிவாசி மக்கள்மூணாறில் உள்ள இடமலைகுடியில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு ஆண்டவன்குடி, சொசெட்டிகுடி, பறளியார்குடி என 24 குடிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கேரள அரசால் ஒதுக்கப்பட்ட நிதி சென்றடையவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் இப்பகுதி மக்கள் சாலை, மருத்துவமனை, கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடமலைகுடிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தார். அவரிடம், அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கேரளா அரசு இடமலை குடிக்கு ஒதுக்கிய நிதி தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், சாலை, மருத்துவமனை, கல்வி மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாமல் தவிப்பதாக கூறினர்.