நாகை, டிச.31: குண்டும், குழியுமாக மாறியுள்ள வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் வேளாங்கண்ணியும் ஒன்று. வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கீழ்திசை நாடுகளின் திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணி பேராலயம் ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் இருப்பதால் விடுமுறை தினங்கள் மட்டும் இல்லாமல் தினந்தோறும் கார், வேன், பஸ் என்று சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தை ஒட்டியுள்ள வங்க கடலில் குளிக்க வேண்டும் என்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையில் புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி வேளாங்கண்ணி பேராலயம் வரையிலான சாலை மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை வாகனங்களில் செல்வோர்கள் கடப்பதற்கும் போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த அளவிற்கு சாலை மிகவும் மோசமாகி பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்குகிறது.