தர்மபுரி, டிச.31: தர்மபுரி அருகே ஊராட்சி தலைவர் பதவி ஏலம் நடந்த பனைகுளம் ஊராட்சியில், முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் ஊராட்சியில் திருமல்வாடி, வத்திமரத்துஅள்ளி, பனைகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நிலையில், பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 10ம் தேதி, திருமல்வாடியில் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஏலம் நடந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் ₹24 லட்சத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் எடுத்தார். இந்ததகவல் பென்னாகரம் தேர்தல் அலுவலர்களுக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஏலம் நடத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.