ஊட்டி, டிச.30:நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி 3 மாதங்கள் நல்ல மழை பெய்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் உரமிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால், மேலும் மழை காரணமாக பசுந்தேயிலை மகசூலும் அதிகரித்தது. மழை பெய்து அதன் பின்னர் நன்கு வெயில் அடித்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழையும் ஓரளவிற்கு பெய்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் துவங்க வேண்டிய உறைபனி பொழிவு இன்னும் துவங்கவில்லை. தற்போது பகல் நேரங்களில் மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மேலும் லேசான வெயில், மேகமூட்டமான காலநிலை, பனிப்பொழிவு என பல்வேறு வகையான மாறுபட்ட காலநிலைகள் நிலவுவதால் பசுந்தேயிலை வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. மழைக்கு பின் போதுமான அளவு வெயில் இல்லாததால் தேயிலை செடிகளில் வளர்ந்துள்ள தேயிலை கொழுந்து இலைகளில் கொப்பள நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.