தோகைமலை, டிச. 29: கரூர் மாவட்டம் அதிமுக சார்பாக தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு 3வது வார்டு கவுன்சிலராக போட்டியிடும் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மங்காம்பட்டி சின்னவழியான் மனைவி பாப்பாத்தி சின்னவழியானுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கும், கள்ளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கள்ளை சிங்கமுத்து என்ற கருப்பையாவுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்திற்கும் வாக்குகள் கேட்டு கள்ளையில் அதிமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சேம்பர் ரெங்கசாமி தலைமையில் பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார். அவர் பேசுகையில், தற்போது தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவிக்தொகையானது கரூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தகுதி உள்ள அனைவருக்கும் கூடுதலாக வழங்க உள்ளது. மேலும் கள்ளை ஊராட்சி பகுதி அடித்தட்டு மக்கள்வரை அனைவருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் இரட்டைஇலை சின்னத்திற்கும், ஆட்டோ ரிக்ஷா சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்றார்.