கோவை, டிச. 27: கோவையில் புத்தாண்டையொட்டி, 2020ம் ஆண்டிற்கான டைரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதில், மொபைல் சார்ஜர் வசதியுடன் கூடிய டைரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோவையில் டைரி விற்பனை துவங்கி நடந்து வருகிறது. கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி, மணிக்கூண்டு, ஐந்து முக்கு, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புத்தக, நோட்டு விற்பனை கடைகளில் டைரி விற்பனை நடக்கிறது. மொபைல் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஆண்டிற்கு ஆண்டு டைரி விற்பனை குறைந்து வருகிறது. இருப்பினும், சிலர் டைரி எழுதும் பழக்கத்தை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், ெதாழிலாளர்கள் மத்தியில் டைரிக்கான மவுசு தற்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டைரிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக மொபைல் போன் சார்ஜர் வசதியுடன் கூடிய டைரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை டைரிகளில் 6 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பாங்க் வசதியுள்ளது. இதன் மூலம் மொபைல் போனை சார்ஜ் செய்ய முடியும்.