திருப்பூர், டிச. 24: திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த லக்கி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் பின்னலாடை சார்பு நிறுவனங்களும், வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் ஆகியவைகள் உள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் திருடர்கள் மாலை நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த ரோட்டில் செல்போனில் பேசியபடி பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து சென்றனர்.