வீரவநல்லூர், டிச. 19: சேரன்மகாதேவி, முக்கூடலில் பைக், செல்போன் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேரன்மகாதேவி புத்தராயாதவர் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் குப்புசாமி என்ற சுரேஷ்(35), பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை ஐயப்ப பக்தர்போல் மாலை அணிந்து வந்த வாலிபர் ஒருவர், சுரேஷ் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிக் கொண்டு தெருவின் மறுபக்கம் வழியாக தள்ளிச் சென்றுள்ளார். மெயின்ரோட்டுக்கு போக வழி தெரியாமல் தேரடி வீதி வழியாக பைக்கை தள்ளி வந்துள்ளார். அவ்வழியாக வந்தவர் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரனாக பேசியதால் சந்தேகமடைந்து உள்ளூர் நபர்களின் உதவியோடு அவரை சேரன்மகாதேவி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பைக் திருடிய நபர் திருப்பூரை சேர்ந்த முனியசாமி மகன் பொன்னுச்சாமி(21) என்பது தெரியவந்தது. இவர் சேரன்மகாதேவியில் பைக்கை திருடுவதற்கு முன்பு மேலப்பாளையத்தில் ஒரு பைக்கை திருடி அம்பை நோக்கி சென்றுள்ளார். வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளி அருகே செல்லும்போது பைக்கில் பெட்ரோல் காலியாகவே சாலையோரம் இருந்த புதருக்குள் பைக்கை மறைத்துவிட்டு சேரன்மகாதேவிக்கு வந்து சுரேஷ் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்து பொன்னுச்சாமியிடம் தீவிர விசாரணை நடத்து வருகின்றனர்.