கடையநல்லூர், டிச.11: கடையநல்லூரில் அரசு மருத்துவமனை, கருப்பாநதி அணைக்கட்டு மற்றும் கலைமான்நகர் பளியர் இன குடியிருப்புகளில் நேற்று கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஆண் மற்றும் பெண் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகள் இன்சுலின் உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் குறைவாக கிடைப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கருப்பாநதி அணைக்கட்டு அருகில் உள்ள கலைமான் நகர் பளியர் இன மக்கள் வசிக்கு குடியிருப்புகளை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் அனைத்து பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகையை திரும்ப வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.