சென்னை, டிச. 11: அண்ணாநகர் அருகே சாலை தடுப்பில் கார் மோதி நொறுங்கியது. இந்த கார் மீது அடுத்தடுத்து வந்த 2 பைக்குகளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவ மாணவன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரோஷன் (24). போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மருத்துவமனையில் பயிற்சி பணியை முடித்துவிட்டு, காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அண்ணாநகர் சாந்தி காலனி அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி ெநாறுங்கியது. அப்போது, பின்னால் வந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து கார் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபு ஆனந்த் (33), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவி (29), மற்றொரு பைக்கில் வந்த திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன் (45) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.