துறையூர், டிச.10: துறையூர் பெரியார்நகரில் வீடுகளில் மர்ம குறியீடு போடப்பட்டுள்ளதால் வடமாநில திருடர்கள் குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட உள்ளனரா என்று பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளது பெரியார் நகர் மற்றும் சாமிநாதன்நகர். இங்குள்ள தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் அடிக்கடி வெளியூர் செல்வோர்கள் வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் சாலை சாமிநாதன்நகரில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நிறைவேறியுள்ளது. தொடர் திருட்டால் இப்பகுதிமக்கள் பீதியடைந்த நிலையில் நேற்று பெரியார் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் ரபீக் என்பவர் வீட்டில் வட்ட குறியீடு குறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் வீட்டிலும் குறியீடு குறிக்கப்பட்டுள்ளது.