துறையூரில் பெரியார்நகரில் வீட்டின் சுவர்களில் மர்ம குறியீடு பொதுமக்கள் பீதி

துறையூர், டிச.10: துறையூர் பெரியார்நகரில் வீடுகளில் மர்ம குறியீடு போடப்பட்டுள்ளதால் வடமாநில திருடர்கள் குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட உள்ளனரா என்று பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளது பெரியார் நகர் மற்றும் சாமிநாதன்நகர். இங்குள்ள தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் அடிக்கடி வெளியூர் செல்வோர்கள் வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் சாலை சாமிநாதன்நகரில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நிறைவேறியுள்ளது. தொடர் திருட்டால் இப்பகுதிமக்கள் பீதியடைந்த நிலையில் நேற்று பெரியார் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் ரபீக் என்பவர் வீட்டில் வட்ட குறியீடு குறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் வீட்டிலும் குறியீடு குறிக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீடு வடமாநில திருடர்கள் வரைந்து இருப்பர்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக துறையூர் காவல்நிலையத்தில் ரபீக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த பின்பே மற்ற விவரங்கள் தெரியவரும். மர்ம குறியீடு மேலும் எந்தெந்த வீடுகளில் உள்ளது என்று அந்த தெருவில் உள்ள மக்கள் வீடு வீடாக சென்று பார்த்து வருகிறார்கள். இதனால் பெரியார் நகர் மற்றும் துறையூர் பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், திருடர்கள் பயம் இன்றி பொதுமக்கள் நடமாட காவல்துறை துணை புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: