அம்பை, டிச. 4: அம்பை, கடையம், வி.கே.புரத்தில் தொடர் மழைக்கு 9 வீடுகள் இடிந்து சேதமானது.
அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.தொடர் மழை காரணமாக அம்பை இல்லத்தார் வடக்கு தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (60) என்பவரது வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமணன், அவரது மகன் மாரியப்பன் (24) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் லட்சுமணன் மனைவி சுப்புலெட்சுமி (55), மகள் சுகன்யா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.இதேபோல் அருகிலிருந்த கந்தசாமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அவர், வெளியூர் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. சுப்பிரமணியபுரம் பொத்தை ராமமூர்த்தி மகன் கருப்பசாமி (34) என்பவரது வீட்டு சாய்ப்பு இடிந்து விழுந்தது. பெரியகுளம் வடக்கு தெருவில் ஆறுமுகம் மனைவி வள்ளியம்மாள் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.