திருவள்ளூர், டிச. 4: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நாராயணபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை முழுமை பெறாத நிலையில், ஷட்டர்கள் திறந்தே கிடப்பதால் மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் நாராயணபுரம் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதில், ஷட்டர் பணிகள் முடிவடையாத நிலையில் திறந்தே உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இந்த மழைநீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது. இதனால், இப்பகுதியில் மழைநீரை சேமிக்க இயலவில்லை. மேலும், மழைநீரை தடுப்பணியில் சேமித்தால், சுற்றுப்புற கிராம விவசாயிகள் பயன் அடைவர். பூண்டி ஏரி நிரம்பினால், இந்த மழைநீரும் சேர்ந்து வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.