கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாலை நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான கல்யாணசுந்தரம், உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ்அகமது, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், அந்தந்த பஞ்சாயத்திற்குட்பட்ட எந்த வார்டிலும் போட்டியிடலாம். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அந்தந்த பஞ்சாயத்திற்குட்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், உதவி தேர்தல் அலுவலர் வேட்புமனுவை பெற்று, தினமும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் அறிவித்த தேதியில் மனுக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.வேட்பாளருடன் 3 நபர்களுக்கு மட்டுமே உடன் வர அனுமதிக்க வேண்டும். ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் வேட்புமனுவை சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
தளி அருகே தீயில் எரிந்து கார் நாசம்