ஜலகண்டாபுரம், டிச.3: ஜலகண்டாபுரத்தில், நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஜலகண்டாபுரம், ஆவடத்தூர், சூரப்பள்ளி, தோரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம், பெரும்பாலான நேரங்களில் நெரிசல் மிகுந்து காணப்படுவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் விஷேசங்களுக்கு வருவோர், அங்கு வாகனங்களை நிறுத்தாமல் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், மருத்துவமனையின் உள்ளே செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.