நாகர்கோவில், டிச.3: நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகள் தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிப்பது வழக்கம். ஆனால் தேர்தல் அறிவிக்கப்படும்போது பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அம்மா திட்ட முகாம், மனுநீதிநாள் முகாம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும். தேர்தலுக்கு பின்னர் இவை மீண்டும் செயல்படுத்தப்படும். இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வழக்கம்போல காலை முதலே ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். அதிகாரிகளும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வந்தனர்.