கெங்கவல்லி, டிச.1: கெங்கவல்லி அருகே வாய்க்காலில் வந்த தண்ணீர் தடுத்து நிறுத்தியதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷனை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கொல்லிமலை அடிவாரத்திலிருந்தும், வலசக்கல்பட்டி ஏரியில் இருந்தும் வாய்க்கால் மூலமாக வரும் தண்ணீரை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்து வந்தனர். ஆனால், சுமார் 5 வருடமாக வாய்க்கால் காய்ந்து கிடந்த நிலையில், தொடர் மழையால் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் ₹2 லட்சம் பணம் வசூலித்து வாய்க்காலை தூர் வாரி சாகுபடி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், கெங்கவல்லி அருகே கடம்பூர் செம்படவர்குட்டையில், நடுவலூருக்கு வாய்க்கால் மூலமாக செல்லும் தண்ணீரை தடுத்து, அங்குள்ள குட்டையில் சேமித்து வருகின்றனர். இதனால், நடுவலூர் வாய்க்காலில் தண்ணீர் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.