கோவை,நவ.28: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் 549 துப்புரவு தொழிலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை அள்ளுவது, சுகாதார பணிகளை மேற்கொள்ளுவது போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து காலியாக உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் மாநகராட்சி சார்பாக வரவேற்கப்பட்டன. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என மட்டும் கல்வி தகுதி குறிப்பிட்டிருந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் மாநகராட்சியில் நேற்று மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடந்தது. முதல் நாளாகிய நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டனர். எம்.இ, எம்.எஸ்.சி, பி.எஸ்.சி, பி.எட் போன்ற பட்டதாரிகளும் துப்புரவு பணியிடத்திற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.