நாமக்கல், நவ.27: வேட்டம்பாடி ஏரியில் அதிகப்படியான கழிவுநீர் கலப்பால் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கிறது. நாமக்கல் அருகேயுள்ளது வேட்டம்பாடி. இங்கு பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக நாமக்கல் பகுதியில் அவ்வப்போது பெய்த மழை மற்றும் கொல்லிமலை கருவாட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் ஏரியின் பல பகுதிகள் முட்புதராக காட்சி அளிக்கிறது. மேலும் ஏரியில் கழிவுநீர் அதிகமாக கலக்கிறது. நாமக்கல் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கொசவம்பட்டி ஏரியில் கலந்து, அங்கிருந்து வேட்டம்பாடி ஏரியிலும் கலந்து வருகிறது.