சோளிங்கர், நவ. 27: திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் மர்ம காய்ச்சலால் பரிதாபமாக இறந்தார். அதேபோல் திருப்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகி உள்ளார்.வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த சின்னபாராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், கூலித்தொழிலாளி. இவரது மகள் திவ்யா(21). இவருக்கும் நெமிலி அடுத்த பரத்தேரி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்நிலையில், திவ்யாவிற்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதாம். இதேபோல் கடந்த 16ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் நரசிம்மன், தனது மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்த திவ்யாவிற்கு நேற்று திடீரென காய்ச்சல் அதிகமானது. இதனால் அவரது பெற்றோர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து விநாயகம் சோளிங்கர் போலீசில் நேற்று காலை புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திவ்யா திருமணமான 9 மாதத்தில் இறந்ததால் இதுதொடர்பாக ராணிப்பேட்டை ஆர்டிஓ இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.அதேேபால் திருப்பத்தூரில் சிறுவன் பலியாகி உள்ளார். திருப்பத்தூர் கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் ரிக்கவ்ஷா(40), நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க இயக்குநர். இவரது மனைவி கயல்விழி. இவர்களுக்கு 2 மகன்கள். இதில், இளைய மகன் கவுரவ்ஷா(6), திருப்பத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.