கோவை, நவ. 26: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் பானுமதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி வ.உ.சி. பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நேரு பூங்காவில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.