ஈரோடு, நவ.26: பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ‘டேலண்ட் ஷோ 2019’ திறனாய்வு போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மெய்ப்பிக்கும் வகையில் போட்டிகளும், தொழில்நுட்ப அறிவு சார்ந்த போட்டிகளும், கலை மற்றும் கலாசாரம் சார்ந்த போட்டிகளும், அறிவியல் கண்காட்சியும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 364 பள்ளிகளை சேர்ந்த 2,226 மாணவ, மாணவிகள் மற்றும் குழுக்கள் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். மொத்தம் 2,949 மாணவ, மாணவிகள் கல்லூரியின் பல்வேறு துறைகளில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதன் நிறைவு விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள கொங்கு பல்கலை மையத்தில் நடந்தது. இதில் சுங்கம் மற்றும் மத்திய கலால்த்துறை அதிகாரி சரவணன், ஈரோடு மாவட்ட தலைமை கல்வி அதிகாரி பாலமுரளி, ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.