கிருஷ்ணகிரி, நவ.19: பர்கூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 949 பயனாளிகளுக்கு ₹1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பர்கூரில், தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பர்கூர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், 650 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 207 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 52 பேருக்கு தனி பட்டா, 35 மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 949 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 90 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, தாசில்தார்கள் சித்ரா, முனுசாமி, தனி தாசில்தார் சின்னசாமி, துணை தாசில்தார் பெரியண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்நாதன், பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் முகமதுபையாஸ், முன்னாள் எம்பி பெருமாள், கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாஜலம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.