தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்கும் கிராமங்கள் எத்தனை?

தேனி, நவ. 19: தேனி மாவட்டத்தில் எந்தெந்த கிராமங்களில் யார், யார் கஞ்சா விற்பனை செய்கின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா கிடைப்பதை தடுக்க என்ன செய்யலாம் என தேனி மாவட்ட போலீசார் பட்டியல் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெருமளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய எஸ்பியாக பொறுப்பேற்ற சாய் சரண் தேஜஸ்வியின் கவனத்திற்கு இந்த விஷயம் செல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது என்ற தகவலை தேனி மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு போலீசார் எஸ்பியிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா எங்கெங்கு கிடைக்கிறது. அதனை விற்பனை செய்பவர்கள் யார்?  அவர்களது பின்னணி என்ன? இதற்கு முன்னர் இவர்கள் வழக்கில் சிக்கி உள்ளார்களா என்பது உட்பட பல்வேறு விவரங்களை எஸ்பி, தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்த பட்டியல் ஓரிரு நாளில் தேனி மாவட்ட எஸ்பி கைக்கு போய் சேரும். அதன் பின்னர் அதிரடி நடவடிக்கை இருக்கும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை களைகட்டி வருகிறது. எஸ்.பி பொறுப்பேற்ற மறுநாளே மிகப்பெரிய ரெய்டு நடந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2400க்கும் அதிகமான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் பாட்டில் விற்பனை நடக்கும் இடங்கள், விற்பனை செய்பவர்கள் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: எஸ்பி பொறுப்பேற்றதும் தேனி மாவட்டத்தில் முழு அமைதியை நிலைநாட்டுவேன். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று உத்தரவாதம் அளித்தார். கஞ்சா, மது விற்பனையை கட்டுப்படுத்தினால் பொது அமைதியும், பாதுகாப்பு பணிகளும் பெரும் அளவில் நிறைவேற்றப்பட்டு விடும். இதனால் இந்த விஷயங்களில் எஸ்பி தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறினர்.

Related Stories: