சென்னை, நவ.19: சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், துபாயை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் நிறுவனத்துக்கு கடந்த 2009ம் ஆண்டு, ₹1.59 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்தார். அந்த நிறுவனமோ, அதற்கான ஒரு பகுதி பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தை வழங்காமல் மறுத்து விட்டது.இதனால், அந்த நிறுவனம் மீது செல்வம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு, அப்போதைய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ₹50 ஆயிரம் லஞ்சமாக வாங்கியுள்ளார்.அதன்பிறகு, ராமமூர்த்தியின் மனைவி கல்பனாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வேளச்சேரியில் உள்ள கல்பனாவுக்கு சொந்தமான சொத்தை, புகார் கொடுத்த செல்வத்துக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் முடிவு செய்தனர்.இதற்காக, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் லஞ்சமாக ₹30 லட்சம் கொடுக்கும்படி செல்வத்திடம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் செல்வம் ₹10 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை கிரையம் செய்ய கூடாது என கல்பனாவை தடுத்துள்ளார்.