திருவள்ளூர், நவ. 19: திருவள்ளுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, குழந்தை நேய காவல் பிரிவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.தொடர்ந்து, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘’திருவள்ளுர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், குழந்தைகளுடன் வரும் பெண்கள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க குழந்தை நேய காவல் நிலையம் என தனி பிரிவு அமைத்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களான திருவள்ளுர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் 3 நிலையங்களில் குழந்தை நேய காவல் நிலையம் முன்னோட்டமாக திறக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களும் விரைவில் மாற்றப்படும். ஜனவரி முதல் இன்று வரை 1,269 பெண்கள் காவல் நிலையங்களை அணுகியுள்ளனர். அவர்களில் 640 நபர்கள் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர்.