மூணாறு, நவ.13: மூணாறு அருகே கல்லார்-மாங்குளம் பகுதியை இணைக்கும் கல்லார்வலி பாலத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலத்தை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறு அருகே அமைந்துள்ளது கல்லார். இங்கிருந்து மாங்குளம் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமாக கல்லார்வலி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பாதுகாப்பு மதில் சுவர் உடைந்ததன் காரணமாக குரிஷுபாறை , பீச்சடு, மாங்குளம் பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த பாதை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குரிஷுபாறை பகுதியில் இருந்து ஆட்டோ மூலம் பீச்சடு பகுதிக்கு வந்தடைகின்றனர். அதன் பின்னர் பேருந்துகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.