ஆற்காடு, நவ.13: ஆற்காடு அருகே நேற்று நடைபெற்ற சாலை பணியால் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆற்காடு அடுத்த காவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புங்கனூர் வரை தார்சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று காலை 9 மணி முதல் காவனூர், புங்கனூர் பஸ் நிறுத்தம் அருகே காலி பேரல்கள் மற்றும் வாகனங்களை குறுக்கே நிறுத்தி அவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மாலையில் பள்ளி முடித்து தனியார் பள்ளி பஸ்களும், வேன்களும் மாணவர்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், மாணவர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். வழக்கமாக வீட்டிற்கு வந்துவிடும் தங்களது பிள்ளைகள் வர தாமதமானதால் பெற்றோர்களும் அச்சமடைந்தனர்.
இதனால், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆட்டோக்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். ஆனால், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பலர் நடந்தே வீட்டுக்கு சென்றனர்.