கோவை, நவ. 13: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாமிஅய்யர் புது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி கடந்த ஒருமாதமாக மூடப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் முழுவதும் 24 மணிநேர குடிநீர் வினியோக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் குடிநீர் வினியோகிக்கும்போது தண்ணீர் சீராக செல்லும் வகையிலும் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட 85 வது வார்டு பகுதியை சேர்ந்த சாமி அய்யர் புது வீதியில் சாலையில் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பாக குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழி தோண்டப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் மூடப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வாகனங்களில் அவ்வழியே செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.